டோக்யோ: சுனாமியால் சேதமடைந்த புகுஷிமா அணு உலையின் கதிரியக்க நீரை, கடலில் விடுவிக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. இதற்கு தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானை கடுமையான நிலநடுக்கம் தாக்கியது. அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அந்த பேரிடரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இப்பேரிடரில், புகுஷிமா அணு உலையும் பாதிப்புக்குள்ளானது.

அணு உலைகள் சேதமடைந்து நீரில் கதிரியக்கம் கலந்தது. அதை சுத்தம் செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். கதிரியக்க நீர் அதற்கு தடையாக உள்ளது. அதனை வெளியேற்றினால்தான் அணு உலைகளை அப்புறப்படுத்த முடியும்.

கதிரியக்க நீரை வெளியேற்றும் பணியில் உள்ள டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (டெப்கோ), ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்குகளில் அவற்றை சேமிக்கிறது. ஆனால் அவை 2022ம் ஆண்டில் நிரம்பிவிடும். எனவே கதிரியக்க நீரை கடலில் விடுவிப்பது என பிரதமர் யோஷிஹிடே சுகா தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

அணு உலையை நீக்க தண்ணீரை வெளியேற்றுவது தவிர்க்க முடியாத பணி என்று கூட்டத்தில் பிரதமர் சுகா கூறினார். கதிரியக்க நீரின் பாதுகாப்பு நிலைகளை உறுதி செய்த பிறகே வெளியேற்றப்படும் என்றார் அவர்.

அதிகம் தீங்கு விளைவிக்காத ட்ரீடியத்தை தண்ணீரிலிருந்து அகற்ற முடியாது என டெப்கோ அதிகாரிகள் கூறினர். அதே சமயம், சில கதிரியக்க அணுக்களை வெளியேற்றுவதற்கு ஏற்ற நிலைக்கு கொண்டுவர முடியும் என்கின்றனர். இருப்பினும், ஜப்பானின் இம்முடிவுக்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் சீனாவும் இதுதொடர்பாக கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கழிவுநீரை வெளியேற்றும் பிரச்சினையை பொறுப்பான முறையில் கையாளுமாறு சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஜப்பான் தூதருக்கு தென் கொரியா சம்மன் அனுப்பியுள்ளது.