புதுடெல்லி: செப்டம்பர் 11ம் தேதி நிறைவடைந்த 2 வார காலக்கட்டத்தில், நாட்டின் வங்கிகள் வழங்கிய கடன் தொகை ரூ.102.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கிகளின் டெபாசிட் அளவு 11.98% அதிகரித்து, ரூ.142.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுவே, கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைந்த இரு வார காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன் ரூ.97.13 லட்சம் கோடியாகவும்; டெபாசிட் அளவு ரூ.127.22 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட விபரங்கள் மேலும் கூறியிருப்பதாவது; கடந்த ஜூலை மாதத்தில், உணவு பொருட்கள் அல்லாத துறைகளில் வழங்கப்பட்ட கடன் 6.7% அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில் 11.4% வளர்ச்சி பெற்றிருந்தது.

மேலும், ஜூலை மாதத்தில், தொழிற்துறைக்கு வழங்கப்பட்ட கடன் வளர்ச்சி, 0.8% என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதுவே, கடந்தாண்டு ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வளர்ச்சி, 6.8% என்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.