புதுடெல்லி: எல்ஐசி நிறுவனப் பங்குகளை பகுதியளவிற்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, எல்ஐசி தொழிற்சங்கங்கள் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நாட்டின் மிகப்பெரிய மற்றும் லாபகரமான காப்பீடு நிறுவனம்தான் எல்ஐசி. ஆனால், அரசின் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக, எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகள் விற்பனை செய்யப்படுமென, மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது பாரதீய ஜனதா அரசு.

தொடக்கநிலை பொது வழங்கல் மூலமாக இந்த விற்பனை, அடுத்த நிதியாண்டில் துவகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடெங்கிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனவே, இந்தப் பகுதியளவு பங்குகள் விற்பனையை எதிர்த்து, எல்ஐசி நிறுவனத்தின் 3 தொழிலாளர் யூனியன்கள் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

நாடெங்கிலும் உள்ள 2048 கிளை அலுவலகங்கள், 114 கோட்ட அலுவலகங்கள் மற்றும் 8 பிராந்திய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களது மதிய உணவு இடைவேளையின்போது திரண்டு, அரசின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.