சென்னை:

யுள் கைதியை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளித்ததை ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு வெவ்வேறாக இருப்பது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  அதற்கு தமிழக அரசு பதில் அளித்ததை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் இரணியன்அல்லி கிராமத்தை சேர்ந்த யோகா செந்தில் என்பவருக்கு, கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் கடந்த 14 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும், ஏராளமான கைதிகள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி முன் விடுதலை செய்யப்பட்டு வந்த நிலையில், தனது மகனையும் விடுக்க வேண்டும் என அவரது தாய் அமுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை 6 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால், தமிழகஅரசு எந்தவித முடிவும் எடுக்காத நிலையில்,  தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை  நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு விசாரித்தது. அப்போது ஆஜரான  அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், முன்விடுதலை கோரும் மனுக்களை சிறை விதிகளுக்குட்பட்டு சிறை அதிகாரி பரிசீலித்து, அவர் திருப்தி அடையும் பட்டத்தில் சிறைத்துறை தலைவருக்கு அனுப்புவார் என்றும், அதுபின்னர் தமிழக உள்துறைக்கு அனுப்பப்பட்டு ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும்,  அரசின் பரிந்துரையை தன்னிச்சையாக ஆராயும் ஆளுநர் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே விடுதலை முடிவு இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் செந்திலை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனு நிராகரிக்கப்பட்டதாகவும்  விளக்கம் அளித்தார்.

இதையடுத்து,  தர்மபுரி பேருந்து தீ வைப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை, அரசு முன் கூட்டியே விடுதலை செய்திருப்பதையும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்க அரசு தீர்மானம் இயற்றியதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒவ்வொரு வழக்கிற்கும் அரசு வெவ்வேறு நிலைப்பாட்டை எடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.

மேலும், சந்தர்ப்பவசத்தால் குற்றம் புரிந்த செந்தில் போன்றவர்களை விடுவிப்பதில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டப்படுகிறதே என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  10 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டுமென அரசு முடிவெடுத்தால் அது அனைவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும், அரசியல் அழுத்தம் காரணமாக இதுபோல முடிவுகள் எடுக்கப்படுகிறதா? எனவும் வினா எழுப்பினர்.

யோகா செந்தில் விவகாரத்தில் அரசு மாற்று நிலைப்பாடு எடுக்க காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இன்றைக்கு  ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு வழக்கறிஞர்,  ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த முடிவு சரியா? தவறா? என்பது குறித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விவாதிக்க முடியாது என்றும், அரசின்  முடிவை எதிர்த்து தனி வழக்காகத்தான் தொடுக்க முடியுமெனவும் விளக்கமளித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.