கங்கனாவை தொடர்ந்து நடிகை பாயலும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஆளுநருடன் சந்திப்பு..

மும்பை நகரை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு சிவசேனா மிரட்டல் விடுத்ததால், அவருக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தி சினிமா டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை பாயல் கோஷும், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரியை நேற்று ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசிய பாயல், இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

மும்பையில் குடியரசு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதால்வேவையும், நடிகை பாயல் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அதால்வே ‘’ பாயலை களங்கப்படுத்திய இயக்குநர் அனுராக்கை 7 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம்’’ என்று எச்சரித்தார்.

அனுராக் மீது பாயல், மும்பையில் உள்ள வெர்சோவா காவல் நிலையத்தில் ‘’ அனுராக் என்னிடம். கடந்த 2014 ஆம் ஆண்டு தவறுதலாக நடந்து கொண்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனப் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.