உ.பி.யில் இன்னொரு நிர்பயா: ஓடும் பேருந்தில்  பலாத்காரம்

டெல்லியில் மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டு  சில மாதங்கள் ஆன நிலையில், நிர்பயாவுக்கு நேர்ந்த கதி மற்றொரு பெண்ணுக்கும் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம்  பிரதாப்கார் என்ற இடத்தில் இருந்து டெல்லி பக்கமுள்ள நொய்டாவுக்குத் தனது இரு குழந்தைகளுடன் ஒரு பெண், பேருந்தில் பயணம் செய்தார்.

அவரது கணவர் நொய்டாவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

அந்த தனியார் பேருந்தில், மேலும் 10 பயணிகளும் இருந்தனர்.  உ.பி.பெண்ணுக்குக் கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த பேருந்துக்கு இரு ஓட்டுநர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் மற்ற பயணிகள் இறங்கிவிட்ட நிலையில் நள்ளிரவில் அந்த பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நேற்று நொய்டாவில் இறங்கிய அவர், தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்த கணவனிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லிக் கதறியுள்ளார்.

இதையடுத்து அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார்.

பலாத்காரம் செய்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்ட நிலையில், மற்றொரு ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

 – பா. பாரதி