சென்னை:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு முன்பு எங்கள் ஆலோசனைகளையும்  கவனத்தில் கொள்ளுங்கள் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம், திமுக இளைஞர் அணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் நேரில் மனு அளித்தார்.

இதுகுறித்து அவர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
10 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த 10 ஆம் வகுப்புத் தேர்வை கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஜூன் 1ம் தேதி தொடங்கி 12ம் வரை நடத்துவது என அரசு முடிவு செய்தது.
பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், தனியார் பள்ளி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்புகளிடமி ருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 10 ஆம் வகுப்புத் தேர்வை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று எங்கள் கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்திக் கூறியிருந்தார்.
கழகத் தலைவர் கோரிக்கை மேலும், ‘தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள சூழலில் தேர்வெழுதும் மனநிலையில் மாணவர்கள் இல்லை. மனதளவில் அவர்களைத் தயார்ப்படுத்தியபிறகே தேர்வை நடத்தவேண்டும். பள்ளி திறக்கப்பட்டு இரு வாரம் சென்றபிறகு தேர்வை நடத்துவதே சரியான நடைமுறையாக இருக்கும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தன் முடிவில் உறுதியாக இருந்த பள்ளிக் கல்வித்துறை, தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டது.
இந்தநிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு குறித்து விவாதிக்க தி.மு.கழக இளைஞரணி-மாணவரணி யின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் (18-05-2020) திங்கட்கிழமை மாலை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள இச்சூழலில் 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும், அதைத் தள்ளிவைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு அணிகளின் அமைப்பாளர்களும் விவாதித்தனர்.
அப்போது விவாதிக்கப்பட்ட பயனுள்ள பல தகவல்களைத் தொகுத்து தேர்வைத் தள்ளி வைக்கக் கோரி அரசு செயலருக்கும், மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மனுக்களாகத் தருவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் 10ஆம் வகுப்புத் தேர்வை 15 நாட்கள் தள்ளி, ஜூன் 15 தொடங்கி 25ம் தேதிவரை நடத்தப்போவதாக அரசு அறிவித்து புதிய தேர்வு அட்டவணையையும் நேற்று வெளியிட்டது.
உயர் கல்வித்துறை தேர்வுகள் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கும்போது 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு மட்டும் ஏன் இத்தனை அவசரம்?
எதற்கெடுத்தாலும் மத்திய அரசைப் பின்பற்றும் இந்த அரசு, தன் CBSE பள்ளிகளுக்கான தேர்வுகளை ஜூலையில் நடத்தும் மத்திய அரசின் முடிவை மட்டும் பின்பற்றாதது ஏன்? பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் ஏன் இந்த அவசரம்?
இதுபோன்று பல கேள்விகள் எழுந்தாலும் 15 நாட்கள் தேர்வைத் தள்ளி வைக்கும் அரசின் இம்முடிவை இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட தி.மு.கழகம் மனதார வரவேற்கிறது. அதேவேளை, தேர்வெழுத வரும் மாணவர்களை கவனமாகக் கையாண்டு கொரோனா தொற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றினால் மட்டுமே தேர்வு விஷயத்தில் அரசின் பணி முழுமையடையும்.
அந்தவகையில் அரசுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக இளைஞரணி-மாணவரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை இந்த மனுவில் தொகுத்தளித்துள்ளோம்.
1. கொரோனா நோய்த் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
2. ஊரடங்கு இன்னமும் விலக்கிக்கொள்ளப்படாது நான்காம் முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.
3. 12 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.
4. நோய்த்தொற்று நீங்காத நிலையில் 9.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் நோய் தாக்கும் அபாயத்திற்குள்ளாகின்றனர்.
5. இதன் காரணமாகப் பெற்றோர் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
6. பொதுப் போக்குவரத்து ஆரம்பிக்கப்படாத நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், இதரப் பணியாளர்களும் தேர்வு மையங்களுக்கு செல்வதில் இன்னலுக்குள்ளாவார்கள்.
7. குறிப்பாக மலைப் பகுதிகளில் வாழும் மாணவர்கள் / பெற்றோர்கள் / ஆசிரியர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.
8. அனைத்து தேர்வர்களுக்கும் வாகன வசதி உறுதி செய்யப்படவேண்டும். அப்படி ஏற்பாடு செய்யப்படும் வாகனங்கள் தனிமனித இடைவெளியுடன் அமரும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
9. ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் என்றால் ஏறத்தாழ 9.5 லட்சம் பேரை அமரச் செய்யும் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, அது உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும்.
10. விடுதிகளில் தங்கிப் படித்த மாணவர்களுக்குத் தங்குமிடம், உணவு குறித்த ஏற்பாடுகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவை பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டியவை. எனவே இதன்மீது அரசு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11. ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வழங்க அரசிடம் போதுமான ‘தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE)’ இருக்கிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
12. ஏதேனும் மாணவர்களுக்கு தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படவேண்டும்.
13. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தங்கள் பள்ளி இருக்கும் இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்ற விவரம் அரசிடம் இல்லை. எனவே இந்த விவரம் உடனடியாக சேகரிக்கப்பட வேண்டும்.
14. ஊரடங்கு காலத்தில் இவர்களில் பெரும்பான்மையோர் மின் அனுமதிச் சீட்டு (E-Pass) பெற்று தேர்வு மையங்களுக்குத் திரும்ப முடியாமல் தவிக்க நேரிடும். அதைத் தவிர்க்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?
15. பல பள்ளி வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான இருப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ள சூழலில் அங்கே மாணவர்களைத் தேர்வு எழுதச் செய்வது நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.
16. திருமண மண்டபங்கள் பாதுகாப்பனவையல்ல. நோய் தொற்றைப் பரப்பக்கூடும், அதனால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
17. கட்டுப்பாட்டு மண்டலத்திலுள்ள (Containment Zone) உள்ள மாணவர்களின் நிலை என்ன? அங்கே எப்படித் தேர்வு எழுத முடியும் என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை.
18. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்களுக்கு இந்தப் பொதுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுமா?
19. கொரோனா சூழலில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்கள் தேர்வினை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியாது. அவர்களை அரசு மனதளவில் எப்படி தயார்படுத்தப் போகிறது? இதற்கென ஆற்றுப்படுத்துதல் (Counselling) வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன்பிறகே தேர்வுகள் நடத்தப்படவேண்டும்.
20. நோய்த்தொற்றின் அபாயத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு பள்ளிகள் திறந்த பின்னர் அவகாசம் அளித்து மாணவர்கள் தங்கள் பாடங்களை நல்ல முறையில் திருப்புதல் செய்வதற்கு வாய்ப்பளித்த பின்னரே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை.
ஆனால் தேர்வுக்கு முன் மாணவர்கள் திருப்புதல் செய்துள்ளார்களா இல்லையா என்பதை ஆசிரியர்கள் எப்படி கவனிக்க முடியும், -அதற்கு ஏதேனும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றிய விவரங்கள் தேவை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் மனதில்கொண்டு தேர்வெழுத வரும் மாணவர்களைக் கவனமுடன் கையாண்டு நோய்த்தொற்றிலிருந்து அவர்களைக் காத்திடவும், கல்வியில் அவர்கள் உயர்ந்திடவும் ஆதரவளித்திடவேண்டுமாய் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.