லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று காணொலி வாயிலாக நீதிபதி முன்பு ஆஜரானார்.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோர் 2001ம் ஆண்டு அகமதபாத் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையிடு செய்தது. இந் நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 31-க்குள் முடிக்க  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தினமும்  லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக தலைவர் உமா பாரதி ஆகியோர் நேரில் வாக்குமூலம் அளித்தனர்.
இந் நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று காணொலி வாயிலாக நீதிபதி எஸ்.கே.யாதவ் முன் ஆஜரானார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. முரளி மனோகர் ஜோஷி நேற்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.