டெல்லி: இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் 2 வாரம் அவகாசம் அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கின் போது, அனைத்து வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், இ.எம்.ஐ செலுத்த ஒத்திவைக்கப்படும் காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது. அதே நேரத்தில் கடன் தொகையை திருப்பி செலுத்தும் அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆகஸ்ட் 31 வரை கடன் தொகையை கட்டாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வழக்கு  விசாரணையும் இன்றைக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

இந் நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் கோரப்பட்டது.

தனையடுத்து, ஆகஸ்ட் 31ம் தேதி வரை கடன் தொகையை கட்டாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற தடை தொடரும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் மத்திய அரசுக்கு 2 வாரகாலம் அவகாசம் அளித்து,  விசாரணை செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.