நெல்லை:

மிழகத்தில் இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று  நாங்குனேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா.தி.மு.க. வெற்றி விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நாங்குநேரி உச்சிமாகாளி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். அண்ணா.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட துணைமுதல்வர் ஓபிஎஸ்,  நாங்குநேரி சட்டமன்ற தொகுதி நன்றி அறிவிப்பு கூட்டம் ஒரு மாநாடு போல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நாங்குநேரி தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர். எந்த நோக்கத்திற்காக இந்த கட்சியை தொடங்கி ஆட்சி நடத்தினாரோ அந்த நோக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த கழகமும், ஆட்சியும் 100 ஆண்டுகள் இருக்கும் என்று ஜெயலலிதா சொன்னதை நிரூபிக்கும் வண்ணம் நாங்குநேரி தொகுதி வெற்றி கிடைத்து உள்ளது.

சமுதாய சீர்திருத்தத்திற்காக தந்தை பெரியாரும், தமிழ் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று அண்ணாவும், ஏழை-எளிய மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆரும் பாடுபட்டனர். இந்த 3 தலைவர்களையும் ஒருங்கே பெற்று அன்பு, அறிவு, ஆற்றல் பெற்றவர் ஜெயலலிதா.

1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அண்ணா.தி.மு.க.வை தொடங்கி, 3 முறை முதலமைச்சராக இருந்தார். அப்போது, அண்ணா.தி.மு.க.வில் 18 லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த இயக்கத்தை 29 ஆண்டுகள் பொதுச்செயலா ளராக ஜெயலலிதா இருந்து 1 கோடி உறுப்பினர்களை சேர்த்து அண்ணா.தி.மு.க.வை எக்கு கோட்டையாக மாற்றி உள்ளார்.

எம்.பி. தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதால், இவர்கள் இனி ஜெயிக்கமாட்டார்கள் என்றும், தமிழக அரசையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால் இந்த தொகுதி மக்கள் எங்களுக்கு வெற்றி பெற்று தந்து மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்கள். நாங்கள் என்றும் இந்த தொகுதி மக்களுக்கு நன்றி கடன் பட்டுக்கொண்டு இருப்போம்.

இந்த அரசின் திட்டங்கள் ஒவ்வொரு ஊருக்கும் வந்து சேரும். உங்களுக்கு என்ன தேவை என்பதை உங்களது சட்டமன்ற உறுப்பினரிடம் சொல்லுங்கள். அவர் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவார் என்று நான் உறுதி கூறுகிறேன்.

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும். டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் அண்ணா.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும். அதை நீங்கள் பெற்றுதர வேண்டும். மக்களுக்காக தியாக வாழ்க்கை வாழ்ந்த ஜெயலலிதா சொன்னது போல் இந்த வெற்றி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.