சிவகாசி:

ராட்சித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர், அதிமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கலும் நடைபெற்று வரும் நிலையில், மற்றொருபுரம், உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டு, தேர்வு செய்யப்படும் அவலமும் அரங்கேறி உள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்தாலும் பல பகுதிகளில், பல பதவிகள் அந்த பகுதி கட்சித்தலைவர்களின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகி வருகிறது.

இந்த நிலையில்,  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி யிடுவது தொடர்பான நடைபெற்ற கூட்டத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த,  இளைஞரான தனியார்  வங்கி ஊழியர், அதிமுகவினரால்  அடித்துக் கொலை  செய்யப்பட்டார்.

சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பபடுபவர் குறித்து, அதிமுகவினர் ஆலோசனை நடத்தியதாகவும், அதற்கு, அப்பகுதியை சேர்ந்த வங்கி ஊழியரான  சதீஷ்குமார் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஏற்பட்ட மோதலைத்தொடர்ந்து, சதிஷ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் பலத்தகாயம் அடைந்து மயக்கம் அடைந்த நிலையில்,அவரை  சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை தொடர்பாக, அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராமசுப்பு, ராம்குமார், சுப்புராஜ்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.