சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டுப்பதிவுக்கான நேரம் மற்றும் வாக்குச்சீட்டின் நிறம் பற்றிய விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர்.

அவர்களின் பதவிக் காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் களம் இறங்கி உள்ளது. அனேகமாக, இம்மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனையும் நடத்தி இருக்கிறது.  எந்த நேரமும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற சூழல் தான் தற்போது உள்ளது.

இந் நிலையில், ஓட்டுப்பதிவுக்கான நேரம் மற்றும் வாக்குச்சீட்டின் நிறம் பற்றிய விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.