சென்னை:

மிழகத்தில்  ஊரகப்பகுதிகளுக்கு  உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று தேர்தல் தேதியை அறிவித்து உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் இன்றைய அறிவிப்பு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், முதல்வருக்கு ஆதரவாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,தேர்தல் அறிவிப்பு கூறிய கருத்துக்கள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன்:

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது முறைகேடுக்கு வழி வகுக்கும். 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் முறைகேடு செய்வதறகாகவே என்று குற்றம் சாட்டி உள்ளார்.

“உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு இந்த அரசு நிச்சயம் தேர்தலை நடத்தாது.இரண்டு கட்டங்களாக தேர்தலை அறிவித்திருப்பதை பார்த்தால், யாராவது நீதிமன்றத்தை நாடி தேர்தலை நிறுத்தமாட்டார்களா என்ற எண்ணத்திலேயே செயல்பட்டது போல உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது எனத் தெரிந்தே இன்று தேர்தல் தேதி தொடர்பாக அறிவிப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து தேர்தலை கூட இரண்டு கட்டமாக நடத்துவதாக அறிவித்துள்ளார்கள். இது வாக்குப்பதிவின் போது வன்முறை மற்றும் ரவுடித்தனத்துக்கு வழிவகுக்கும்.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தட்டும். அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம். தேர்தலைக் கண்டு அஞ்சும் கட்சி தி.மு.க அல்ல.

உள்ளாட்சி அமைப்பு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரசு கொள்ளையடித்து வருகிறது. தேர்தலை நடத்தினால் அவ்வாறு அவர்களால் கொள்ளையடிக்க முடியாது. ஆகையால் அ.தி.மு.கவினர் தேர்தலை நடத்தமாட்டார்கள்.

அ.தி.மு.க அரசு இன்று அறிவித்துள்ளதுதான் இறுதி முடிவு என்றால் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்ததும் இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 

மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டிய தேர்தலாகும். ஆனால் தமிழ்நாடு அரசு ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும்.

தேர்தலையே தள்ளிப் போடுவதற்கhக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியாகும் என்பதால், மாநில அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும் என்று தெரிவித்து உள்ளார்.

செ.கு.தமிழரசன்

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறும்போது,  நீதிமன்றத்தின் அழுத்ததால் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு ஜனநாயகப் படுகொலை என்று கூறி உள்ளார்.

கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளதவாது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாகவும், ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி நிச்சயம் போட்டியிடும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது மூலம் குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு உள்ளது. கிராம ஊராட்சி, நகராட்சிக்கு இதுவரை தனித் தனியே தேர்தல் நடைபெற்றது இல்லை எனவும் கூறியுள்ளார்.

பாஜக

“ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை பாஜக வரவேற்கிறது!” பாஜக மூத்த உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.