புதுச்சேரி:
புதுச்சேரியில் நாளை முதல் திட்டமிட்டபடி உள்ளூர் ஊரடங்கு 32 பகுதிகளில் அமலாகும் என்று முதல்வர் நாராயணசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாளுக்கு 300 பேருக்கு என பரவிய தொற்று தற்போது நாளுக்கு 500 என உயர்ந்துள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், தொற்று பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த புதுவை அரசு நகரின் 32 பகுதிகளில் உள்ளூர் ஊரடங்கு அறிவித்துள்ளது. உள்ளூர் ஊரடங்கு நாளை (ஆக. 31) முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இதற்காக இந்த பகுதிகளில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே மத்திய அரசு ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில், மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுவை அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள உள்ளூர் ஊரடங்கு திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் பலருக்கும் சந்தேகம் நிலவியது. இதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, “பொது ஊரடங்குக்கே மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். உள்ளூர் ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தலாம். எனவே, திட்டமிட்டபடி திங்கள் முதல் உள்ளூர் ஊரடங்கு அமலுக்கு வருகிறது” என்று கூறினார்.

உள்ளூர் ஊரடங்குக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நிவாரணம் வழங்கிய பிறகு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர்

இன்று (ஆக.30) காலை முத்தியால்பேட்டை ரொசாரியோ வீதி, பெருமாள் கோவில் சந்திப்பு ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பில் வருவாய்துறையினர் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்,

இதனை அத்தொகுதி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தடுத்தார். நிவாரணம் வழங்காமல் தடுப்பு கட்டைகள் அமைக்க விடமாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் அப்பணியை விட்டு சென்றனர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த மக்கள் எம்எல்ஏவுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். இதனையடுத்து, பொதுமக்களுடன் சேர்ந்து தடுப்பு கட்டைகளை எம்எல்ஏ அகற்றினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நிவாரணம் வழங்காமல் உள்ளூர் ஊரடங்கை அனுமதிக்க மாட்டோம். குறைந்தபட்சம் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். இதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை மக்களுக்காக எதிர்கொள்ள தயாராக உள்ளேன்” என கூறினார்.