மும்பை: மும்பை பந்த்ரா ரயில் நிலையத்தில் ரயில் சேவை உள்ளதாக, தவறான தகவல் அளித்தார் என்ற புகாரில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் நிருபரை மராட்டிய மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பையில், ஏப்ரல் 14ம் தேதியன்று, பந்த்ரா ரயில் நிலையத்தில் ரயில் சேவை இயக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதனால், மும்பையில் ஊரடங்கால் பட்டினியில் வாடிவரும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், ஊரடங்கை மீறி, செய்தியை நம்பி, தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் ஆவலில் ஒரே நேரத்தில் ரயில் நிலையம் வந்து குவியத் துவங்கினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு, கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

வதந்தியை பரப்பியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் பேட்டியளித்தார். இந்நிலையில் பந்த்ரா ரயில் நிலையத்திலிருந்து ரயில் சேவை இயக்கப்படுவதாக வெளிமாநில தொழிலாளர்களுக்கு தவறான தகவல் அளித்ததாக ராகுல் குல்கர்னி என்ற உள்ளூர் தொலைக்காட்சி நிருபரை போலீசார் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவரை, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.