சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ.

உலகம் எங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று ஒரு நாளில் அந்நாட்டில் 1,111 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் 9,125 ஆக இருக்கிறது. ,இதையடுத்து முக்கிய முடிவை அறிவித்து இருக்கிறார் அந்நாட்டு பிரதமர் லீ. ஊரடங்கை ஜூன் மாதம் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளார்.

அதே நேரம் வரும் 3ம் தேதி வரை விதிகள் கடுமையாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் சமூக விலகலை பின்பற்றாமல் ஏராளமானோர் சென்று வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தொடக்க காலத்தில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைவாகவே இருந்தது. ஆனால் அதன்பிறகு வெளிநாடுகளில் இருந்து தங்கி இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடையே கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டது. சமூக விலகல் கடைப்பிடிக்காமல் இருந்ததே இதற்கு காரணம் என்பது தெரியவர இப்போது, ஊரடங்கு வரும் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.