சென்னை:

ரடங்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்,  மனுதாரருக்கு ரூ. 50ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை 5 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இமானுவேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் என்று கூறி கடந்த மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை படிப்படியாக நீட்டித்து, தற்போது வரும் 30ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வருவாய் இழந்து வறுமையில் உள்ளனர்.  பல வெளிநாடுகளில் முழு ஊரடங்கை அறிவிக்காமல், வைரஸ் தொற்று பரவாமல் தடுத்தது. மேலும், கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் வரை, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணி வேண்டும் என்ற நிபந்தனைகளை கடைபிடித்தாலே போதுமானது. எனவே, ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி  அமர்வில்,  ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே இதுபோல் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும், மனுதரார் அரசியல் கட்சியைச் சார்ந்தவர் என்றும் எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு  வாதங்களுக்கு பிறகு அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள், ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.