டெல்லி: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை, முன்னிட்டு ஏழை, எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அரசு செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டு உள்ளார்.

இந்த 10 கடமைகளையும் அவர் தமது ட்விட்டர் குறிப்பிட்டுள்ளார்.  அதில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளதாவது:

1. பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி உடன் வழங்க வேண்டும்.

2. குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடமிருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயின் குடும்பத்திற்கும் ரூ 12,000 உடன் வழங்க வேண்டும்.

3. மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும்  ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.

4. ஜன் தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் (நகர்ப் புற வங்கிக் கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ.3,000 உடன் வழங்க வேண்டும்.

5. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக உடன் வழங்க வேண்டும்.

6. ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளையோ, ஊதியத்தையோ குறைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தரும் ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.

7. மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும், ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளைப் பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறந்து அக்கணக்கில் ரூ.3,000 உடன் வழங்க வேண்டும்.

8. எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை ஜூன் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்.

9. வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாத தவணை (EMI) இறுதி நாட்களை 30-6-2020க்கு ஒத்தி வைக்க வேண்டும்.

10. மக்களின் அன்றாடத் தேவைக்கு பயன்படும் பொருள்கள், சேவைகள் மீது உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5% உடன் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.