சென்னை:
சென்னையில் மே 28 ம் தேதி வரை 144 தடை நீடிக்கப்படுவதாக மாநகர காவல்துறை கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்து உள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு (லாக்டவுன்) மே 28ந்தேதி வரை நீட்டிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3 கட்டமாக மே 17ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இடையில் சிறுகுறு தொழிற்சாலைகள், கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் சென்னை உள்பட தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் ஊரடங்கு காரணமாக அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டு உள்ளார்.
அதில் மே 28ம் தேதி வரை தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே பொது இடம், போக்குவரத்து பகுதி, சாலை, தெருவில் மே 13 வரை இருந்த தடை தற்போது மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.