சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொடரப்பட்டு வரும் லாக்டவுன், தளர்வுகள் மற்றும் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 28ந்தேதி மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், தற்போது குறைந்து வரும் கொரோனா பாதிப்புகளால்,  சுமார் 90 சதவிகித தளர்வுகளுடன் லாக்டவுன் நீடித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இங்கிலாந்தில் புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டு உள்ளது. சாதாரண வைரசை விட 70 சதவிகிதம் வேகமாக பரவும் இந்த வைரஸ் தொற்று உலக நாடுகளை மீண்டும் பிதி அடைய செய்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்துக்கு வான்வெளி, கடல்வழி போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த பயணிகள் சிலருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், விமானத்தில் வந்த அனைத்து விமான பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர்   எடப்பாடி பழனிசாமி , வரும் 28ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். புதிய வகையிலான வீரியமிக்க கொரோனா பரவாமல் தடுப்பது ப மற்றும் முடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.