கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் செப்டம்பர் 20ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவில் அலை ஓயவில்லை. பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நீட், ஜே.இ.இ. நுழைவு தேர்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆகையால் தேர்வுகள் நடத்துவது குறித்து, சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி வழியே இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.  எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுச்சேரி, பஞ்சாப், சத்தீஷ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம்,  மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்துக்கு பின்னர் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியதாவது: நடப்பு ஊரடங்கு நடவடிக்கைகள் செப்டம்பர் 20 வரை மேற்கு வங்க மாநிலத்தில் நீட்டிக்கப்படுகிறது. செப்டம்பர் 7, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.