சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடனான பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்படவேண்டுமா என்பது குறித்தும்,  கொரோனா நோய் தொற்றின் நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் அரசின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா நோய் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா நோய் தொற்றின் நிலவரம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது, மாவட்டங்களில் உள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிகிறார்.

இதனை தொடர்ந்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்ய உள்ளார் இந்த கூட்டங்களில், டிசம்பர் மாத ஊரடங்கு தொடர்பாகவும் முதலமைச்சர் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளிகள் திறப்பு குறித்த ஆலோசனையும் கூட்டத்தில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.