சென்னை:  தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம்  இருந்து இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல்  ரூ.21.33 கோடியாக உயர்ந்துள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும்  கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 7 கட்டமாக ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 2முறை பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை  மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை (ஆகஸ்டு 23ந்தேதி வரையிலான நிலவரம்) ஊரடங்கை மீறி வெளியில் சுற்றி வந்தவர்களிடம் சுமார் ரூ.21.33 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை 6,92,497 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 9.88 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 8.94 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு காவல்துறை தெரிவித்து உள்ளது.