சென்னை:

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித் பேச திமுக, அதிமுக கட்சிகள் குழுக்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ள நிலையில்,  தேமுதிமுகவும் குழு அமைத்து  களத்தில் குதித்துள்ளது.

லோக்சபா தேர்தல் களத்தில் தமிழகத்தில் , திமுக காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் இன்றும் வெளிப்படையாக கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிகவும் களத்தில் இறங்கி உள்ளது.

சமீபகாலமாக வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகள், திமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதை எடுத்துரைத்து வருகின்றன. இதன் காரணமாக  திமுக கூட்டணி கட்சிகளான  மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் போன்றவை திமுகவை நம்பியே உள்ளன.

அதேவேளையில், அதிமுகவும், பாஜகவும் மறைமுகமாக  கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், விஜயகாந்த் கட்சியான தேமுதிகவும் கூட்டணி குறித்து பேச குழுக்களை அமைத்துள்ளது.

இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த, அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது என்றும், அந்த  குழுவில், தே.மு.தி.க. அவைத் தலைவர் வி. இளங்கோவன், கொள்கை பரப்புச்செயலாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், துணைச் செயலாளர்களான ப.பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.