டில்லி:

முன்னாள் நடிகையும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ஜெயபிரதா ஏற்கனவே 3 கட்சிகளில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்த நிலையில், தற்போது 4வது கட்சியாக பாஜகவில் இணைந்துள்ளார்.

ஜெயப்பிரதா  ஏற்கனவே தெலுங்குதேசம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக்தள் கட்சியில் இருந்தவர். தற்போது  ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இன்று இணைந்தார்.

தமிழ் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயப்பிரதா. இவர் 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து விலகி, 2004-ம் ஆண்டு  முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் பாராளு மன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சியில், கட்சி தலைவர்களான முலாயமும், அமர்சிங்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஜெயப்பிரதா, முலாயம் அணியில் இருந்து விலகி அமர்சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் இணைந்தார்.

ஆனால், அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், எந்த கட்சிக்கு போவது என்று குழம்பி வந்த நிலையில், பாஜக அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் தருவதாக கூறி வலை விரித்தது.

பாஜக வலையில் சிக்கிய ஜெயப்பிரதான இன்று பா.ஜனதாவில் இணைந்தார்.

இதையடுத்து,  உத்தரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அசம்கானை எதிர்த்து ஜெயப்பிரதாக களமிறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.