ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தின் ஒரு தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக அங்கு எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு சாத்தியமில்லை என்பதால், பழைய வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இவிஎம் எனப்படும் எலக்ட்ரானிக் வோட்டிங் இயந்திரத்தில்முறைகேடு நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றன. அதற்கு மறுப்பு தெரிவித்து வரும் தேர்தல்ஆணையம், தற்போது அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அந்த ஒரு தொகுதியில் மட்டும், வேறு வழியின்றி மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பி வந்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

முதல்கட்ட மற்றும் 2வது வட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் தேதிகள் முடிவடைந்துள்ளன. பல இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த முழு விவரமும் அதிகாரப்பூர்வக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  நிசாமாபாத் தொகுதியில் மாநில முதல்வரான சந்திரசேகர ராவின் மகள் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிகமானோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் குறித்து  ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் பலரது மனுக்கள் தள்ளுபடி செய்த நிலையில், இறுதியாக 185 பேரின் மனுக்களை ஏற்கப்பட்டிருப்பதாக அறிவித்து உள்ளது.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜட் குமார், எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில், அதிகபட்சமாக  63 வேட்பாளர்கள் மற்றும் நோட்டோ உடன் 64 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற முடியும். ஆனால், இங்கு   185 பேர் போட்டியிடுகிறார்கள். இதன் காரணமாக, இங்கு வாக்குச் சீட்டு முறையிலான தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.