புதுடெல்லி:

உயர் மட்டத்திலான ஊழல் குறித்த 480 புகார்களை லோக்பால் முடித்து வைத்துள்ளது.


இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மீதான புகாரை விசாரிக்க லோக்பால் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 31-ம் தேதி வரை 480 புகார்களை விசாரித்து முடித்து வைக்கப்பட்டுள்ளது.

லோக்பாலில் எத்தகைய புகார்களை அனுப்ப வேண்டும் என்ற விவரத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை.

இதனால், லோக்பால் வரம்புக்குள் வராத புகார்களை எல்லாம் பொதுமக்கள் அனுப்புகின்றனர். இவற்றை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

எனவே, பென்சன், பணி தொடர்பான பிரச்சினை, பொதுமக்கள் குறைகள் ஆகியவற்றை லோக்பாலுக்கு அனுப்பக் கூடாது.

அரசு இணையத்தில் சென்று சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு புகார் செய்ய வேண்டும். ஊழல் அல்லாத புகார்களை லோக்பாலுக்கு அனுப்பக் கூடாது.

தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ், லோக்பால் தலைவராக உள்ளார்.
இது தவிர லோக்பாலுக்கு 8 உறுப்பினர்கள் உள்ளனர்.