லண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடி செலுத்த வேண்டும் என்று லண்டன்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
மும்பையில் செயல்படும் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியில் 2012ம் ஆண்டு அனில் அம்பானி குழுமம் வாங்கிய கடன் தொகை ரூ. 7000 கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. வாங்கிய கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் கொடுத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கு, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், கடனுக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சீன வங்கிகளிடம் பெற்ற 717 மில்லியன் டாலர் தொகையை 21 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் நிறுவன செய்தி  தொடர்பாளர், அது தனிநபர் கடன் அல்ல, கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் அளிக்கவில்லை. இதை அவரே (அனில் அம்பானி) பல முறை கூறி உள்ளார்.
ஆதாரம் இருந்தால் சமர்ப்பியுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் லண்டன் நீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படுத்தாது. ரிலையன்ஸ் கட்டுமானம், ரிலையன்ஸ் எரிசக்தி மற்றும் ரிலையன்ஸ் முதலீடு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவு அனில் அம்பானிக்கு பெரும் சங்கடமாக இருக்கிறது, பணம் செலுத்தப்படாவிட்டால், அவர் இந்தியாவை விட்டு மற்ற நாடுகளுக்கு வரும் போது, அவரை கைது செய்ய சீன வங்கிகள் சர்வதேச காவல்துறையான இன்டர்போலை நாடும் என்று சர்வதேச சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.