காத்மாண்டு: ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சை கருத்தை தெரிவித்திருப்பதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைக்காலமாக நேபாளத்திற்கும், இந்தியாவுக்குமான உறவில் சிக்கல்கள் உருவாகி வருகின்றன. இப்போது அந்த நிலைமை சீரடைந்து வரத்தொடங்கியிருக்கிறது.
இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு, கருத்துக்கள் காரணமாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய பகுதிகளை உள்ளடக்கி நேபாளத்தின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதலும் பெறப்பட்டது.
இந்த விவகாரம், இருநாட்டு உறவை பலவீனப்படுத்தியிருந்தது. இந் நிலையில் பகவான் ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல. உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது என்று கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளதாக நேபாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இருநாடுகளின் உறவுகளில் ஏற்கனவே நீடிக்கும் சிக்கல், சர்மா ஒலியின் இந்த பேச்சால் வலுப்பெறும் என்று கருதப்படுகிறது.