நாசிக்

சுமார் 2150 ஜெலடின் குச்சிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருட்கள் நாசிக் மாவட்டத்தில் பிடிபட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள முல்ஹர் என்னும் சிற்றூர் அருகே காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி உள்ளனர்.  மகாராஷ்டிராவில் இருந்து அந்த வேன் குஜராத் மாநிலத்துக்கு சென்றுக் கொண்டிருந்தது.

சோதனையில் அந்த வேனில் 2150 ஜெலடின் குச்சிகள் மற்றும் 1750 வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.   அந்த வேன் வெடிபொருட்களுடன் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.    அந்த வேனை ஓட்டி வந்த ஓட்டுனர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவர்லால் குர்ஜார் என்னும் 28 வயது இளைஞர் ஆவார்.

ஓட்டுனரின் உதவியாளரான புதாலால் குர்ஜார் என்னும் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.  ஓட்டுனர் பவார்லாலை  கைது செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய உதவியாளரை தேடி வருகின்றனர்.    இது குறித்து வழக்கு  பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.