டில்லி,

ந்தமானில்  புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தில் சென்னை உள்பட கடலோர பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அதன் காரணமாக வரும் 7ந்தேதி முதல் மீண்டும் தமிழகத்தில் கனமழை பொழியும் என்று மிரட்டி உள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வரும் 7ந்தேதி முதல் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை  கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை 93 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாகவும், மேலும் அடுத்த  24 மணிநேரத்தில் சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பல இடங்களில் பலத்த கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.