சென்னை:

பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணிக்கு எம்.இ. எம்.டெக். படிப்பு மட்டுமே போதாது, அதற்கும் மேலேஅகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தும் புதிய ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்தால் மட்டுமே பணியாற்ற முடியும் என்று  அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

தற்போது பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களாக எம்.இ., எம்.டெக் மற்றும் பி.இ., பி.டெக் படித்தவர்களே பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக பொறியியல் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.

இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்கை முடித்திருந்தாலே போதுமானது என்ற விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். தேனாம்பேட்டையில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு தலைவர் அனில் சஹஸ்ரபுதே  தெரிவித்து உள்ளார்.

அதன்படி, பேராசிரியராக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், எம்.இ., எம்.டெக் படிப்புகளுக்குப் பிறகு அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தியுள்ள 8 Module Course என்ற ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்ற முடியும் என்று அவர் கூறினார்.

மேலும், ஏற்கனவே பேராசிரியராக பணியாற்றுவோரும் புதிய சிறப்புப் படிப்பை படித்தால் மட்டுமே பேராசிரியராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பொறியியல் கல்வியில் புதுமையான பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தும் முயற்சியின் முதல் கட்டமாக அடுத்த கல்வியாண்டு முதல்  B.Tech., பிரிவில் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.

மத்தியஅரசின் இந்த புதிய அறிவிப்பு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.