சென்னை:

திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்று பார்வையிட்ட திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின், தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. ஆனால்,  அடுத்து வந்த  ஜெயலலிதா ஆட்சி அந்த நூலகத்தை முடக்கியது. அங்கு குழந்தைகளுக்கான  மருத்துவமனை தொடங்கப்பபோவதாகவும், நூலகத்தை  டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்போவதாகவும் அறிவித்து.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தலையீட்டின் பேரில், அண்ணா நூற்றாண்டு நூலகம் பாதுகாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நூலகத்தை பராமரிக்கவும் உத்தரவிட்ட நீதிமன்றம் தமிழகஅரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று  கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்திற்கு திடீரென சென்றார். அவருடன்   திமுக முக்கிய நிர்வாகிகள் எ.வ.வேலு, ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர். அங்கு நூலகத்தைப் பார்வையிட்ட ஸ்டாலின், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர், அவர் அந்த நூலகத்தில் தன்னை ஒரு உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.