ராஜ்கர்

பாஜக தொண்டரைக் கண்டித்த ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆட்சி கை மாறி உள்ளது.

15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தது, காங்கிரஸ்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா செய்த புரட்சியால், மீண்டும் பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான், முதல்வர் ஆகி விட்டார்.

அவரும் ஒரு புரட்சி செய்துள்ளார்.

என்ன புரட்சி?

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகக் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி , பா.ஜ.க. சார்பில் அந்த மாநிலத்தில் உள்ள ராஜ்கரில் பேரணி நடந்தது.

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பா.ஜ.க. தொண்டரைக் கன்னத்தில் அறைந்தார்,  மாவட்ட பெண் ஆட்சியர் நிதி நிவேதிதா.

‘ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சவுகான் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் அரசு செவி மடுக்கவில்லை.

ஆட்சி மாறியது.

சவுகான் இரு தினங்களுக்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.

அமர்ந்த கையோடு முதல் காரியமாக-

பா.ஜ.க. தொண்டருக்கு ‘பளார்’ விட்ட பெண் ஆட்சியர் நிதி நிவேதிதாவை , அங்கிருந்து தூக்கி அடித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் துணை செயலாளராக அவரை நியமித்துள்ளார்.