போபால்: இஸ்லாமியர் என்று நினைத்து வழக்கறிஞரை அடித்ததாக கூறி அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறது மத்திய பிரதேச போலீஸ்.
மத்திய பிரதேசத்தில் வழக்கறிஞராக இருப்பவர் தீபக் புந்துலே. இவர் கடந்த 23ம் தேதி மருந்து வாங்க கடைக்கு சென்ற போது இஸ்லாமியர் என்று நினைத்த போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். பின்னர், அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் தீபக் புந்துலே கூறி இருப்பதாவது: நான் மார்ச் 23ம் தேதி மத்திய பிரதேசம் பிதுல் பகுதியில் மருந்துப் பொருட்கள் வாங்க மருந்து கடைக்கு சென்றேன். 15 ஆண்டுகளாக நீரிழிவு, மற்றும் ரத்த அழுத்தம் உள்ளது.
அதற்காகவே மருந்துகள் வாங்க சென்றேன். அப்போது நாடுதழுவிய ஊரடங்கு அமலில் இல்லை. எனினும் 144 தடை உத்தரவு இருந்தது. அப்போது என்னை தடுத்து நிறுத்திய போலீசார் கண்மூடித்தனமாக தாக்கினர். எவ்வளவோ எடுத்துக் கூறியும் போலீசார் கேட்கவில்லை.
ஒன்று கூடி என்னை மிருகத்தனமாக தாக்கினர். ஒரு கட்டத்தில் நான் வழக்கறிஞர் என்று சொன்ன பிறகுதான் ஓரளவு அமைதியானார்கள். கடுமையான அடித்ததால் வலி ஏற்பட எனது நண்பர்களை அழைத்தேன்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டேன். தாக்குதல் நடந்த மறுநாளான மார்ச் 24ம் தேதி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு தொடர்ந்தேன். பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தேன் முதல்வருக்கும் கடிதம் எழுதினேன்.
பின்பு போலீசாருக்கு நெருக்கடி அதிகரிக்கவே  எனது புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  மே 17ம் தேதி என் வீட்டுக்கு வந்த போலீசார், தவறுதலாக நடைபெற்றுவிட்டது.
உங்களை வேண்டுமென்று நாங்கள் அடிக்கவில்லை. நீண்ட தாடி வைத்துக் கொண்டு பார்க்க முஸ்லிம் போல இருந்தீர்கள், அதனால் அடித்தோம்.  மன்னித்துக் கொள்ளுங்கள்  என்றும் புகாரை வாபஸ் பெறுமாறு கூறினார் என்றார் தீபக் புந்துலே.