சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து மத்தியஅரசு ஆர்வம் காட்டாத நிலையில், தடுப்பூசி போடும்  மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள்  அமைத்து தடுப்பூசி செலுத்தவும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்படுவது குறித்து, ஆய்வு செய்து முடிவெடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம்  தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.  சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையத்தின் இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில்,  கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளையும் தடுப்பூசி செலுத்தும் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க உத்தரவிட உத்தரவிட கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை  ஏற்கனவே   சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது,  மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,   தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகளை முன்னுரிமை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து, அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், சிறப்பு கவுண்டர்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தள பாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும்,  18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவதால் ஏதேனும் எதிர்விளைவுகள் ஏற்படுமா என மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் கலந்து பேசி மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.