சென்னை:

களின் திருமண வேலை தொடர்பாக பரோல் கேட்டிருந்த ராஜீவ் கொலை வழக்கு கைதி நளினியை  ஜூலை 5ந்தேதி நேரில் ஆஜர்படுத்த சென்ன உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய நளினி கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய வேண்டியதிருப் பதால், தனக்கு 6 மாதம் பரோல் வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், , எனது மகளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தொடர்பாக 6 மாத பரோல் வேண்டும் என சிறைத்துறைக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோரிக்கை மனு கொடுத்தேன்.அந்த மனுவை பரிசீலிக்கவில்லை. மேலும் தான் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறேன்.கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழக அரசு 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. ஆனால் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது.

ஆயுள்தண்டனை கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாத காலம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ளன. எனவே எனது மகளின் திருமணத்துக்காக 6 மாத காலம் பரோல் வழங்க வேண்டும். மேலும், இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையின்போது,  நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என காவல்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் நளினியை ஆஜர்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்த சிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.