டெல்லி:

மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என பெயர் மாற்ற வேண்டும், தமிழையும் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று  மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது,

“இந்தியாவில் பல உயர் நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களின் பெயரிலேயே அழைக்கப்படு கின்றன. அதுபோல மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து, ஏற்கனவே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழி ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்தும், அதில் மாற்றங்கள் செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் இந்திய அரசியல் சட்டத்தின் 348 ஆவது பிரிவு விவரிக்கிறது. அதன்படி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் ஆங்கிலத்தோடு இந்தியும் நீதிமன்ற மொழியாகச் செயல்படுகிறது.

குஜராத் மாநிலம், கர்நாடகா மாநிலம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் வழக்காடு மொழியாக ஆங்கிலத்தோடு தங்கள் மாநில மொழியும் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. உச்ச நீதிமன்றமும், நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எல்லாம் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வருகிறது.

சென்னை உயர்நீதி மன்றத்திலும், வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும் என்று,  தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது என்று கூறியவர்,  இதை கருத்தில்கொண்டு, மாநில உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலத்தோடு அந்தந்த மாநில மொழிகளையும் வழக்காடு மொழிகளாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.