மதுரை:

துரை ஆதின மடத்தின் 293வது மதுரை ஆதினமாக தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்தியானந்தாவை, நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.

அதையடுத்து,   மதுரை ஆதினத்தின 293 மடாதிபதியாக தன்னை கூறியதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்தியானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு, நித்தியானந்தா மீது  மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில்,”மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்து வரும் நிலையில், நித்தியானந்தா தன்னை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக அறிவித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே மதுரை ஆதின மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர், மீண்டும் மடத்திற்குள் நுழைய முயற்சிப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணையின்போது,  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த அக்டோபர் 11ம் தேதி நித்யானந்தா ஆதீன மடத்திற்குள் நுழைய இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2012 ஏப்ரல் 27ல் மதுரை மடத்தின் இளைய ஆதீனமாக தான் நியமனம் செய்யப்பட்டதாகவும், ஆகவே, ஆதீன மடத்திற்குள் நுழையவும், நிர்வாகங்களில் தலையிடவும் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கவேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 292 வது ஆதீனம் உயிரோடு இருக்கும் போது, 293ஆவது ஆதீனம் என குறிப்பிடுவது எப்படி? என நித்யானந்தா தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதில் அளிக்காமல் நித்தியானந்தா தரப்பு காலதாமதம் செய்தால், கோபமடைந்த நீதிபதி, நித்தியானந்தாவை கைது செய்து 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த உத்தரவிடுவேன் என்றார்.

மேலும், விசாரணையின்போது,  நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் சீடர் கைப்பேசி பயன்படுத்தியதும் பெரும் பரபரப்பாகியது. அதைத்தொடர்ந்து, அவரது மொபைல்கை செய்யப்பட்டு  விசாரணை நடத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நித்தியானந்தா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதினத்தின 293 மடாதிபதியாக தன்னை கூறியதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்தியானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து,  மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய மாட்டேன் என்று நித்தியானந்தா பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி  ஒத்தி வைத்தார்.