மதுரை:
துரையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தூங்கா நகர மக்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,003ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதுவரை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மதுரையில் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்மாவட்ட தலைநகராக விளங்கும் மதுரையை கொரோனா பாதிப்பு, ஆட்டம் காண செய்து வருகிறது. நாளுக்கு நாள் எகிறும் பாதிப்பு, பலி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநிலத்தில் 20-ஆவது இடத்தில் இருந்த மதுரை மின்னல் வேகத்தில் முன்னேறுகிறது. நேற்று காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை பின்னுக்குத்தள்ளி, முதல் மூன்று இடத்திலுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் வரிசையில் 4வது இடத்தை வசப்படுத்தியது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 1,703 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,003ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 548 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்