மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன்  காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தானாகவே வழக்கு பதிவு செய்து அதிரடி விசாரணை நடத்திய நீதிபதி பி.என்.பிரகாஷ் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவர் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டுஉள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறை யினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும்  சர்ச்சையை ஏற்படுத்தி யது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தியது.
அதைத்தொடர்ந்து, இறந்தவர்களின் பிரேத பரிசோதனை மற்றும் காவல்நிலைய பாதுகாப்பு, மாவட்ட நீதிபதிகள் நேரடி விசாரணை, சிபிசிஐடி விசாரணை  என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது. இதனால், குற்றவாளிகளான காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கை அதிரியாக விசாரித்து வந்த  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 6ம் தேதி முதல் , உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதியாக சத்தியநாரா யணன் செயல்பட உள்ளார்.
இந்த திடீர் மாற்றம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  3 மாதங்களுக்கு ஒருமுறை நீதிபதிகள் சுழற்சி முறையில், மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படியே பிரகாஷ் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிங்ககப்பட்டு உள்ளது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் M.சத்தியநாராயணன், P. ராஜமாணிக்கம் அமர்வு, பொதுநல மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்கள், அனைத்துவகை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிப்பார்கள் என்றும்,   நீதிபதிகள் K. கல்யாணசுந்தரம், T. கிருஷ்ண வள்ளி அமர்வு அனைத்து வகை ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நீதிபதி V.பாரதிதாசன், ஜாமீன், முன்ஜாமீன் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கிறார். கல்வி, நிலசீர்திருத்தம் , நிலம் கையகப்படுத்துதல் இது தொடர்பான வழக்குகளை நீதிபதி D. கிருஷ்ணகுமார் விசாரிக்கவுள்ளனர் .
மோட்டார் வாகன வரி, வரி தொடர்பான வழக்குகள், ஏற்றுமதி- இறக்குமதி தொடர்பான வழக்குகள் , கனிம வளம் தொடர்பான வழக்குகள் , தொழிற்சாலை மற்றும் வனம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்டவைகளை நீதிபதி G.R. சுவாமிநாதன் விசாரிக்கிறார்.
குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள், சிபிஐ, ஊழலுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி B. புகழேந்தி விசாரிக்கிறார்.
இவ்வாறு நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.