சென்னை:

மிழக லோக் ஆயுக்தா குழு உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தேர்வு செய்யப்பட்ட 5 பேரையும், எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதி மன்றம் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் லோக்ஆயுக்தா கொண்டு வரும் வகையில்  கடந்த ஆண்டு (2019)  ஜூலையில் சட்டப்பேரவையில்  சட்டம் முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, நடை முறைக்கு கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாஸ் உள்பட உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதுகுறித்து கடந்த ஏப்ரல்  1ந்தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற எந்தவொரு கூட்டத்திலும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ள மறுத்து விட்டார்.

இந்த நிலையில்,  மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் லோக் ஆயுக்தா தலைவர் உறுப்பினர் நியமனம் எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், எதிர்கட்சித்தலைவரின் பங்கேற்பின்றி லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும்,  எனவே, லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.  மனுவை விசாரித்த நீதிபதிகள், லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை எதிர்மனுதாரராக சேர்க்குமாறு, மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் அடுத்த  விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.