மதுரை:

நாடு முழுவதும் உள்ள புண்ணிய ஸ்தலங்களில், 2வது தூய்மையான புண்ணிய ஸ்தலமாக தமிழகத்தைச் சேர்ந்த  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ்  நாடு முழுவதும் உள்ள முக்கிய புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அது குறித்த ஆய்வு செய்யப்பட்டு, அந்த இடங்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாட்டின்  முதலாவது தூய்மையான புண்ணிய ஸ்தலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாவது தூய்மை புண்ணிய தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலை மத்தியஅரசு தேர்வு செய்துள்ளது.

டெல்லியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்ரீகஜேந்திரசிங் ஷெகாவத், இணை அமைச்சர் ஸ்ரீரத்தன்லால் கட்டாரியா ஆகியோர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தூய்மைக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகனிடம் வழங்கினர்.

மதுரை மீனாட்சி கோயிலை சுற்றிலும் சுமார் 25 நவீன மின்னணு கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும்,  கோவில் சுற்று பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே இரட்டை குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை பராமரிக்க 24 மணி நேரமும் பணியாளர்கள் இருப்பதுடன், நவீன மண் கூட்டும் இயந்திரம், 63 காம்பேக்டர் பின்கள், 4 மினி காம்பேக்டர் லாரிகள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரங்கள் மற்றும் பக்தர்களை அழைத்துச் செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.