மதுரை:

துரை அருகே உள்ள அச்சம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவி,சிகிச்சை பலனின்று பரிதாபமாக  இறந்தார்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி சித்ராதேவி, ஒருதலைக்காதல் காரணமாக காதலரால் தீ வைத்து எரிக்கப்பட்டார்.

நடுவக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் என்ற இளைஞர், சித்ராதேவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தாகவும், கடந்த 14ந்தேதி காதலர் தினத்தன்று சித்ராவிடம் பாலமுருகன் தனது காதலை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அவரது காதலை ஏற்றுக்கொள்ள சித்ரா மறுத்ததை தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அடுத்த நாள் மாலை மாணவி பள்ளி முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்தபோது, தான் கொண்டுவந்த 2 லிட்டர் பெட்ரோலை சித்ராமீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சித்ராவை மீட்டு , திருமங்கலம் மருத்துவமனையில் சேர்த்து,  முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த மாணவி சித்ராதேவி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. சித்ராமீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பாலமுருகன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறி உள்ளனர்.