மும்பை: ஆன்லைன் முறையில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ் செஸ்’ தொடரில், உலகச் சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இத்தொடரில் உலகளவில் மொத்தம் 12 பேர் பங்கேற்றனர். சீனாவின் டிங் லிரென் மற்றும் ரஷ்யாவின் நெபோம்னியாட்சி உள்ளிட்டோரும் பங்கேற்பாளர்களுள் அடக்கம்.
இந்நிலையில், இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு, உலகச் சாம்பியன் கார்ல்சன் மற்றும் ஹாலந்து நாட்டின் அனிஷ் கிரி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த இறுதிப்போட்டியில், முதல் செட்டில் 3.5-2.5 என்ற கணக்கில் வெற்றிபெற்றார் கார்ல்சன். அதற்கடுத்து போட்டி 4 சுற்றுகளாக நடைபெற்ற நிலையில், இரண்டாவது செட்டிலும் வென்ற கார்ல்சன், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இந்தவகையில் பார்க்கையில், கொரோனா ஊரடங்கு காலத்தில், நடைபெற்ற மொத்தம் 5 ஆன்லைன் செஸ் தொடர்களில், 4 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார் மாக்னஸ் கார்ல்சன்.