மும்பை: ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், ஸ்டாம்ப் வரி மற்றும் பதிவு கட்டணங்களைக் குறைப்பதற்கு முடிவுசெய்துள்ளது மராட்டிய மாநில அரசு.

இதுதொடர்பாக பேசிய அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் பாலாசாஹேப் தோராட், “கட்டுமானத் துறையைச் சேர்ந்த பலர் மற்றும் பங்குதாரர்கள் பலர், என்னை அணுகி, ஸ்டாம்ப் வரி மற்றும் பதிவுக் கட்டணங்களைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

தற்போதைய நிலையில், இம்மாநிலத்தில், நிலத்தின் ஒட்டுமொத்த மதிப்பில் 6% ஐ ஸ்டாம்ப் வரியாக வசூலிக்கப்படுகிறது மற்றும் ஸ்டாம்ப் வரியில் 1% அல்லது ரூ.30000 என்பதில் எது குறைவோ? அது வசூலிக்கப்படுகிறது.

துறைசார்ந்த பல்வேறு முதலீட்டாளர்களின் கருத்துக்களைக் கேட்டு, முதல்வரிடம் கலந்தாலோசனை செய்த பிறகு, பொருத்தமான முடிவுகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, கட்டுமானத் துறையினர், தங்களது அலுவலகத்திலேயே அமர்ந்துகொண்டு ஆன்லைன் முறையில் பதிவுசெய்யும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.