’’பா.ஜ.க.வில் பூகம்பம் வெடிக்கும்’’

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன.

‘’மகாராஷ்டிர மாநில கூட்டணி ஆட்சி தானாகவே கவிழும்’’ என அந்த மாநில பா.ஜ.க. முன்னாள் முதல்-அமைச்சரான தேவேந்திர பட்நாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில மகளிர் நலத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான யஷோமதி தாகூர் ‘’ மகாராஷ்டிராவில் உள்ள 105 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுடன் தொடர்பில் உள்ளனர்’’ எனப் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

‘’அவர்களின் பெயரை வெளியிட்டால் மாநில பாரதிய ஜனதா கட்சியில் ஒரு பூகம்பமே வெடிக்கும்‘’ என அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

’’அருவருப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க. அதிகாரப்பசியுடன் கர்நாடகம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்தது’’ என்று குற்றம் சாட்டியுள்ள யஷோமதி’’ இப்போது ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குறி வைத்துள்ளது’’ என்றார்.

‘’மத்தியில் அறுதி பெரும்பான்மையுடன் பலமாக இருக்கும் பா.ஜ.க. மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஏன்?’’ என்று அமைச்சர் யஷோமதி தாகூர்  வினா எழுப்பியுள்ளார்.

-பா.பாரதி