இந்தி சினிமா உலகில் போதைபொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றம் சாட்டிய பாஜக எம்பி ரவி கிருஷ்ணனுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பியும், மூத்த நடிகையுமான ஜெயா பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார் .

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விசாரணையில் காதலி ரியா மீது போதை தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கன்னடத் திரையுலகிலும் முன்னணி நடிகைகள் மற்றும் கலைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் லோக்சபாவில் நேற்று முன்தினம் பேசிய போஜ்பூரி மற்றும் இந்தி திரை உலகின் முன்னணி நடிகரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியுமான ரவி கிஷன், இந்தி திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார் .

ஜெயா பச்சன், நேற்று ராஜ்யசபாவில் உரை நிகழ்த்தியபோது இதற்கு கண்டனம் தெரிவித்து பேசினார். அவர் கூறுகையில், ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த தொழிலையும் குற்றம் சொல்லக்கூடாது. உங்களுக்கு உணவு ஊட்டும் கையை கடிப்பதற்கு இணையானது அந்த பேச்சு என் சாடியுள்ளார் .

திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக முடிவில்லாமல் தொடரும் வசவுகளுக்குத் தடை விதித்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஜெயா பச்சன் அரசாங்கத்தைக் கோரியிருந்தார் .

ஜெயா பச்சனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் நேற்று விமர்சனங்கள் குவிந்தன. அதுமட்டுமின்றி, அவருக்கு கொலை மிரட்டல்களும் வந்ததாக கூறப்படுகிறது.

இதன்பேரில், மும்பையில் உள்ள ஜெயா பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோரின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பை மகாராஷ்டிர அரசு அதிகரித்துள்ளது.