டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத் தொடங்கி யிருக்கிறது என தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து வருகிறது. இடையில் குறைந்து வந்த தொற்று கடந்த ஒரு மாதமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மும்பை நகரில்  ஒரே நாளில் 1,712 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதுடன் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு  17,864 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,47,328 ஆகி உள்ளது . அதுபோல நேற்றுஒரே நாளில்  81 பேர் தொற்று காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை அங்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  52,996 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை   21,54,253  பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.  தற்போது 1,38,813 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொற்று பரவல் அதிகரித்து வருவதால்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் உத்தவ் தாக்கரே  தீவிரப்படுத்தி உள்ளார். பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் உள்பட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

அவுரங்காபாத் மாவட்டத்தில்  வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாக்பூர் மாவட்டத்தில் மார்ச் 15ம் தேதி முதல் 21ந்தேதி வரை 1 வார கால ஊரடங்கு உத்தரவு அமலாகி உள்ளது.  அதுபோல அமராவதி, யவத்மல் மற்றும் லத்தூர் போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளான பால் பூத், காய்கறி, பழம் மற்றும் மருந்து கடைகள் போன்றவை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டன. பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. இதனால் வாகன போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரிப்பினை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திரையரங்குகள், மற்றும் ஓட்டல்கள் 50 சதவீத அளவுக்கு இருக்கைகளை நிரப்பி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

சமூக, அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.

திருமண சடங்குகளுக்கு 50 பேர், இறுதி சடங்குகளுக்கு 20 பேர் அனுமதிக்கப்படுவர்.

சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பணிகளை தவிர பிற அனைத்து அலுவலகங்களிலும் 50 சதவீதம் அளவுக்கே ஊழியர்கள் பணியாற்ற அனுமதி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டால், பின்னர் கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும் அவை மூடப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவது குறித்து ஆய்வு செய்து வரும் மத்திய சுகாதாரத்துறை, அங்கு கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருகிறது என்று எச்சரித்துள்ளது.