நெல்லை:
டந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் இருந்து நெல்லை திரும்பியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

கொரோனா ஊரடங்கில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வு காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பணி செய்து வந்த ஆயிரக்கணக்கானோர் கடந்த சில நாட்களாக தமிழகம் திரும்பி வருகின்றனர்.  குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் மும்பை உள்பட பல பகுதிகளில், வசித்து வந்த நிலையில், அங்கு கொரோனா பரவல் தீவிரமாகி வருவதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு திரும்பி உள்ளனர். இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் இருந்து வருகிறவர்கள், நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
இவ்வாறு கடந்த 2 நாட்களில் 754 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தில் 12 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கும் கொரோனா தொற்று மே 18-ல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களையும் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 206 ஆக உயர்ந்து உள்ளது.
இதில் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து விட்டார். மீதி 141 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்து உள்ளது. அதில் 40 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 30 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர்களையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
மும்பையில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் தமிழகம் திரும்பி வந்துகொண்டிருக்கும் நிலையில், கொரோனா தொற்று பாதிப்பும் தமிழகத்தில் உயர்ந்து வருகிறது.